மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடிய காஞ்சிபுரம் எம்எல்ஏ
அறிவுசார் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ எழிலரசன் திடீரென குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறிவுசார் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ எழிலரசன் திடீரென குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வித்யா சாகர் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியின் 23 ஆவது ஆண்டு விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் சிறப்பு செயலாளர் ஏ.கே.மணிமேகலை வரவேற்றார்.விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அவரது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார்.
பின்னர் அக்குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அமைச்சர் காந்தியுடன் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தீடீரென மேடைக்கு சென்று குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார். எம்எல்ஏவின் குஷி நடனம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.குழந்தைகளின் பெற்றோர்களும் எம்எல்ஏ எழிலரசனை பாராட்டினார்கள்.
Advertisement
Advertisement