உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி கண்டனம்!
ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் கருத்துக்கு பொன்முடி கண்டனம் குறித்து...
மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் கருத்துக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ., சிபிஎம்., அதிமுக, மதிமுக. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் "ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்" என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.
Advertisement
Advertisement
மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம் என்று பாஜகவுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திமுக சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.