முகப்பு
செய்திகள்

நீதிபதிகளின் கேள்வி: அரசின் ஆர்வமெல்லாம் மதுபானக் கடைகளை நிறுவுவதில் மட்டும் தானா? அரசுப் பள்ளிகளைப் பராமரிப்பதில் இல்லையா?

பள்ளியின் முன் புறம் நிரந்தர பிச்சை எடுக்கும் இடமாக பயன்படுத்தப்படுவதால் அது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

Updated On : 1 அக்டோபர், 2019 at 4:36 PM
பகிர்:

மீஞ்சூரில் உள்ள தனது பள்ளி கட்டிடத்தின் பாழடைந்த நிலை மற்றும் சுகாதாரமற்ற சூழல் குறித்து புகார் அளித்து ஆறு வயது பள்ளி மாணவி தாக்கல் செய்த ரிட் மனுவைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி, பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை சம்மன் அனுப்பியது. 

பொன்னேரியில் உள்ள மீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியின் (தெற்கு) இரண்டாம் வகுப்பு மாணவி ஆர்.பி. ஆதிகை முத்தரசியின் தந்தையான வழக்கறிஞர் A E பாஸ்கரன் என்பவர் தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்து பயிற்றுவிக்க விருப்பம் கொண்டு பொன்னேரி அரசுப் பள்ளியில் சேர்த்தார். ஆனால், தற்போது அங்கு நிலவும் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற பள்ளிச்சூழல் அவருக்கு ஏமாற்றமளிக்கவே அப்பள்ளியின் 2 ஆம் வகுப்பு மாணவியும் தன் மகளுமான ஆதிகை முத்தரசியை மனுதாரராகச் சேர்த்து பள்ளிக் கல்வி அதிகாரிகளின் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்.

இவர்களது மனுவை ஏற்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாய் ஆகியோர் மனு மீதான விசாரணைக்கு உத்தரவிட்டதுடன்.. ஆக்கிரமிப்பின் கீழ் மீதமுள்ள பள்ளி நிலம்.. பள்ளி நேரத்திற்குப் பிறகு சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக மனுதாரர் கூறியதற்கு தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு தொடக்கக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டனர். 

Advertisement

பள்ளியின் முன் புறம் நிரந்தர பிச்சை எடுக்கும் இடமாக பயன்படுத்தப்படுவதால் அது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

அத்துடன் பள்ளி விவகாரங்களைக் கவனிக்க பல அதிகாரிகள் இருந்தபோதிலும், பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதில் அந்த அரசாங்க அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என்றும் தம் மனுவில் பாஸ்கர் மற்றும் அவரது மகள் ஆதிகை முத்தரசி குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கைத் தீவிரமாக கவனித்த நீதிபதிகள், அரசுக்கு மதுபானக் கடைகளை நிறுவுவதில் மட்டும் தான் ஆர்வம் இருக்கிறதா? அரசுப் பள்ளிகளைப் பராமரிப்பதில் இல்லையா?  என்று கேள்வி எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.