ஜோ ரூட், ஹாரி ப்ரூக் சதம்: மே.இ.தீவுகளுக்கு 385 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 385 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 385 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூலை 21) இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி 425 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களும், ஹாரி ப்ரூக் 109 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஷமர் ஜோசப், ஜேசன் ஹோல்டர் மற்றும் கெவின் சின்க்ளேர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 425 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு 385 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.
385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு 299 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.