இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சனத் ஜெயசூர்யாவின் பதவிக்காலத்தை நீட்டிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா கடந்த ஜூலையில் இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியியாளராக நியமிக்கப்பட்டார். இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்ட பிறகு, அந்த அணி குறிப்பிடும் படியான முன்னேற்றம் அடைந்து வெற்றிகளை பெற்று வருகிறது.
சனத் ஜெயசூர்யா பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி, இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி ஆகியவற்றை பெற்றுள்ளது.
பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறதா?
சனத் ஜெயசூர்யா இடைக்காலப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இலங்கை அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய முதன்மை நிர்வாக இயக்குநர் ஆஷ்லே டி சில்வா பேசியதாவது: இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சனத் ஜெயசூர்யாவின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம் என்றார்.
முன்னேறும் இலங்கை
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி இழந்தபோதிலும், ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தாலும், ஓவல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றியை பெற்று அசத்தியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கான போட்டியாளராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.