3-வது ஒருநாள்: மூவர் அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 241 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் விளையாடியது.
மூவர் அரைசதம்
அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் ஆண்ட்ரூ பல்பிர்னி, ஹாரி டெக்டார் மற்றும் லோர்கான் டக்கர் அரைசதம் கடந்து அசத்தினர். ஆண்ட்ரூ பல்பிர்னி 64 ரன்கள் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), லோர்கான் டக்கர் 61 ரன்கள் (7 பவுண்டரிகள்) மற்றும் ஹாரி டெக்டார் 51 ரன்கள் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் டிரெவர் குவாண்டு மற்றும் நிகராவா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முஸர்பானி மற்றும் வெலிங்டன் மஸகட்சா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.