ஆஷஸ் டெஸ்ட் தொடரைப் பார்த்து பொறாமையாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று (நவம்பர் 21) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரைப் பார்த்து பொறாமையாக இருப்பதாகவும், உலக டெஸ்ட் சாம்பியனாக இருந்தும் இந்தியாவுக்கு எதிராக வெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலேயே விளையாடுவதாகவும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஷஸ் தொடரைப் பார்ப்பதற்காக நாங்கள் காலையில் சீக்கிரமாக எழுந்தோம். இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் அவர்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதை சிறிது பொறாமையுடன் பார்த்தோம். விரைவில் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என நம்புகிறேன்.
இந்தியாவுக்கு எதிராக நாங்கள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறோம். இந்த தொடர் 1-1 என முடியவும் அல்லது 2-0 என முடியவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக விளையாடும்போது, குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் சுவாரசியமாக இருக்கும். ரசிகர்களுக்கும் போட்டியின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்றார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடும் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக பொதுவாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.