டி20 உலக கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முக்கியமான ஆட்டத்தில் இருநாட்டு வீரர்களும் கை குலுக்குவார்களா? என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ருசிகர பதிலளித்தார்.
முன்னதாக, ஆபரேசன் சிந்தூருக்குப்பின், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் விளையாட அரசும் பிசிசிஐயும் அனுமதித்திருப்பதற்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
இதனிடையே, துபையில் கடந்தாண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் சுண்டப்பட்ட பின் இரு அணி கேப்டன்களும் கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பரியப்படி கை குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொள்வதே வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாக இருந்து வருகிறது.
ஆனால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டு கடந்து சென்றதைப் பார்க்க முடிந்தது. அதன்பின் ஆட்டம் முடிவடைந்ததும், அதே பாணியில், இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.
இந்த நிலையில், அரசியல் பிரச்னைகளால், டி20 உலகக் கோப்பை தொடக்கத்தில் விளையாட மறுத்த பாகிஸ்தான் அணி பின்னர் சில நிபந்தனைகளுடன் விளையாட சம்மதித்தது. இதையடுத்து, டி20 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் பிப்.15ஆம் தேதி இலங்கையில் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் இருநாட்டு வீரர்களும் கை குலுக்குவார்களா? என்ற கேள்விக்கு, “டாஸ் சுண்டும்போது தெரியும்! காத்திருங்கள்” என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ருசிகர பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.