மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து...
இன்டர் மியாமிக்கான போட்டியில் விளையாடும்போது கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு தொடைத் தசையில் காயம் ஏற்பட்டது.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோ மெஸ்ஸி (38 வயது) இன்டர் மியாமி கிளப் அணியில் 2023 முதல் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் அந்த அணி முதல்முறையாக மெஸ்ஸி தலைமையில் எம்எல்எஸ் கோப்பையை வென்றது.
நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடிவரும் இன்டர் மியாமி அணி உலகக் கோப்பைக்கு முன்பாக தனது கடைசி ஆட்டத்தில் பிலடெல்ஃபியாவுடன் நேற்று மோதியது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 6-4 என த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட்டுகளைச் செய்த மெஸ்ஸி 73ஆவது நிமிஷத்தில் தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தினால் வெளியேறினார்.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11ல் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் மெஸ்ஸிக்கு ஏற்பட்ட காயம் ஆர்ஜென்டீன ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் மெஸ்ஸிக்கு இடது தொடையில் அதிக வேலைப்பாட்டினால் தசையில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து குணமாக அவரது மருத்துவ, செயல்முறை சார்ந்த முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என இண்டர் மியாமி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பைக்கு முன்பாக ஆர்ஜென்டீனா நட்பு ரீதியான போட்டியில் ஜூன் 6ல் ஹொண்டுராஸ் உடனும் ஜூன் 9ல் ஐஸ்லாந்துடன் விளையாடவிருக்கிறது.
ஆர்ஜென்டீனா தனது குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் ஜூன் 16ல் அல்ஜீரியாவுடனும், ஜூன் 22ல் ஆஸ்திரியாவுடனும், ஜூன் 27ல் ஜோர்டானுடனும் விளையாடுகின்றன.
இதுவரை ஐந்து முறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ள மெஸ்ஸி இரண்டு முறை (2014, 2022) தங்கப் பந்து விருதை வென்றுள்ளார். இந்த விருதை அதிகமுறை வென்ற வீரராகவும் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.