உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களை திணறடித்த வைபவ் சூர்யவன்ஷி: சஞ்சய் பங்கார்
உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி அதிரடியாக விளையாடியதாக சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.
உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி அதிரடியாக விளையாடியதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி அதிரடியாக விளையாடியதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக அவர் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினார். புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசி சர்வதேச வீரர்களுக்கு சவாலளிக்கக் கூடிய மாட் ஹென்றியின் பந்துவீச்சை எளிதாக விளையாடினார். பந்தை இரண்டு விதமாக ஸ்விங் செய்யக் கூடிய கலீல் அகமது பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடினார்.
அதுமட்டுமின்றி, சிறந்த லென்த்தில் பந்துவீசக் கூடிய அன்ஷுல் கம்போஜ் மற்றும் மிஸ்டிரி பந்துவீச்சாளரான நூர் அமகமது பந்துவீச்சையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களை அவர் அழுத்தத்தில் வைத்திருந்தார். அவரது ஆட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த சீசன் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமையப் போகிறது என்றார்.