முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பிய குல்தீப் யாதவ்

அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை அவரால் எந்தவொரு கிரிக்கெட் ஆட்டங்களிலும் இடம்பெற முடியாது என...

Updated On : 27 செப்டம்பர், 2021 at 5:40 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:44 AM

கொல்கத்தா அணியில் விளையாடும் குல்தீப் யாதவ் காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.

இந்திய அணிக்காக 7 டெஸ்டுகள், 65 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் குல்தீப் யாதவ் விளையாடியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்குச் சென்ற இந்திய அணியிலும் இடம்பெற்று ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடினார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள 26 வயது குல்தீப் யாதவ் - கடந்த வருடம் 5 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். இதனால் இந்த வருடம் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்திலும் அவர் இடம்பெறவில்லை. 2019 ஐபிஎல் முதல் மிக மோசமாகப் பந்துவீசி வருவதால் இந்திய அணியிலும் தன்னுடைய இடத்தை அவர் இழந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது குல்தீப் யாதவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஃபீல்டிங் செய்தபோது ஏற்பட்ட அந்தக் காயம் தீவிரமாக இருந்ததால் அதற்கு மேலும் ஐபிஎல் போட்டியில் பங்குபெற முடியாத சூழல் உருவானது. இதையடுத்து சிகிச்சைக்காக குல்தீப் யாதவ் உடனடியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக மும்பையில் அறுவைச் சிகிச்சை கொண்டார் குல்தீப் யாதவ். இதனால் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை அவரால் எந்தவொரு கிரிக்கெட் ஆட்டங்களிலும் இடம்பெற முடியாது என அறியப்படுகிறது. குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகியது பற்றி கேகேஆர் அணி இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.