முகப்பு
ஐபிஎல்

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

லக்னௌவுக்கு எதிராக முதலில் பேட் செய்த சிஎஸ்கே ருதுராஜ் மற்றும் துபே அதிரடியால் 210 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2024 at 4:09 PM
ருதுராஜ் கெய்க்வாட் - படம்| ஐபிஎல்
பகிர்:

லக்னௌவுக்கு எதிராக முதலில் பேட் செய்த சிஎஸ்கே ருதுராஜ் மற்றும் துபே அதிரடியால் 210 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ரஹானே முதல் ஓவரிலேயே 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துபே சிக்ஸர் மழையை பொழிந்தார்.

ஷிவம் துபே

அதிரடியாக விளையாடிய அவர் 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் சதம் விளாசி அசத்தினார். அவர் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கடைசி ஓவரின் இறுதிப் பந்தில் மகேந்திர சிங் தோனி பவுண்டரி அடித்து அசத்தினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்துள்ளது. லக்னௌ தரப்பில் மாட் ஹென்றி, மோஷின் கான் மற்றும் யஷ் தாக்குர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.