இலங்கை 291 ரன்களுக்கு ஆல் அவுட்! இந்தியா 309 ரன்கள் முன்னிலை!
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆகியுள்ளது...
மூன்றாம் நாள்: இலங்கை 291 (பெரேரா 92, மேத்யூஸ் 83, ஜடேஜா 3-67); இந்தியா 600. முதல் இன்னிங்ஸில் இந்தியா 309 ரன்கள் முன்னிலை.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆகியுள்ளது.
இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 133.1 ஓவர்களில் 600 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணி 'பாலோ-ஆனை' தவிர்க்க இன்னும் 247 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.
Advertisement
இந்த நிலையில் இன்றும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அசத்தினார்கள். நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடி மேத்யூஸ் ஜடேஜாவின் பந்துவீச்சில் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை பேட்ஸ்மேன்களில் இந்திய அணியின் பந்துவீச்சைத் திறமையாக எதிர்கொண்டவரால் சதமடிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம். இவரைப் போல இந்தியப் பந்துவீச்சை பெரேராவும் சிறப்பாக எதிர்கொண்டார். அவர் 94 பந்துகளில் அரை சதம் எடுத்தார். சிக்ஸும் பவுண்டரிகளுமாக அடித்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.
இதன்பிறகு ரங்கனா ஹெராத்தையும் ஜடேஜா 9 ரன்களில் வெளியேற்றினார். நடுவரின் முடிவை ஏற்காமல் டிஆர்எஸ் கோரினார் ஹெராத். இருப்பினும் அதிலும் அவருடைய வெளியேற்றம் உறுதிசெய்யப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டியை விளையாடும் பாண்டியா 10 ரன்களில் பிரதீப்பை வீழ்த்தினார்.
மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 77 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. பெரேரா 90, குமாரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதன்பிறகு ஆட்டம் தொடங்கியவுடன் ஜடேஜா, குமாராவை 2 ரன்களில் வீழ்த்தினார். அசேல குணரத்னே காயம் காரணமாக இந்த டெஸ்டில் தொடர்ந்து இடம்பெறமாட்டார். எனவே இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 78.3 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் அந்த ஃபாலோ ஆன் ஆனது. பெரேரா 92 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணி ஃபாலோ ஆன் ஆனபின்பும் இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்த அணி 309 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.