இந்தியாவில் கரோனா பாதிப்பு குறையாவிட்டால் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐயைச் சேர்ந்த திரஜ் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 2021 டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. இதனால் 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அப்போட்டி நடைபெறும் என பிசிசிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிசிசிக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ அமைப்பைச் சேர்ந்த திரஜ் மல்ஹோத்ரா கூறியதாவது:
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இயக்குநர்களில் ஒருவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த எல்லாவிதமான முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்.
ஒருவேளை நிலைமை இதேபோல நீடித்தால் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படும். அங்கு நடந்தாலும் போட்டியை பிசிசிஐ தான் நடத்தும் என்றார்.