முகப்பு
செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்ட்: உணவு இடைவேளையில் இந்தியா 46/0

சாம் கரண் வீசிய 15-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது பறிபோனது. இதனால் இந்த ஆட்டத்துக்கான புள்ளியை இரு அணிகளும் சமமாக (4-4) பகிா்ந்துகொண்டன. 

2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

மழையால் முதல் நாள் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. பிறகு டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டிலும் அஸ்வின் தேர்வாகவில்லை. ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா தேர்வாகியுள்ளார். இங்கிலாந்து அணியில் ஹசீப் ஹமீத், மொயீன் அலி, மார்க் வுட் இடம்பெற்றுள்ளார்கள். 

ஆரம்பம் முதல் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால் முதல் 12 ஓவர்களில் ரோஹித் சர்மாவும் ராகுலும் இணைந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அறிமுக ஓவர்களைப் பாதுகாப்பாகத் தாண்டியதால் ஓரளவு அடிக்க ஆரம்பித்தார்  ரோஹித் சர்மா. சாம் கரண் வீசிய 15-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளை அடித்து அசத்தினார். 19-வது ஓவரின்போது மீண்டும் மழை பெய்ததால் அனைவரும் ஓய்வறைக்குத் திரும்பினார்கள். அப்படியே உணவு இடைவேளையை நடுவர்கள் அறிவித்தார்கள்.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 35, ராகுல் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.