தென்னாப்பிரிக்காவில் தொடங்கவுள்ள டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. டி20 லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை என தென்னாப்பிரிக்கா சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் தெ.ஆ. டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பர்க் அணியையும் மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன் அணியையும் சன் டிவியின் சன் ரைசர்ஸ் - போர்ட் எலிசபெத் அணியையும் லக்னெள - டர்பன் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல் அணியையும் தில்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஜிண்டால் செளத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் - பிரிடோரியா அணியையும் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளன. தென்னாப்பிரிக்க நிறுவனங்கள் ஏலத்தில் போட்டியிட்டாலும் அதிக தொகையை முன்வைத்து ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தெ.ஆ. டி20 லீக் போட்டியின் அணிகளைப் பெற்றுள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த மாதம் இப்போட்டியைக் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவுள்ளன.
இதன்மூலம் சிஎஸ்கே அணி முதல்முறையாக வெளிநாட்டு லீக் போட்டியில் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ளது.
டி20 லீக் போட்டியின் தலைவராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செயல்படுவார்.