முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை டி/எல் முறையில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை டி/எல் முறையில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. 

சிட்னியில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 3 ஆட்டங்களில் 2 புள்ளிகளைக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

முதல் ஓவரில் 4 ரன்களுக்கு ரிஸ்வானை வீழ்த்தினார் பார்னெல். இதற்குப் பிறகு முகமது ஹாரிஸ் களமிறங்கினார். காயம் காரணமாகப் பிரபல வீரர் ஃபகார் ஸமான் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக முகமது ஹாரிஸ் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். இது அவருடைய 2-வது டி20 ஆட்டம். 4 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 

ரபாடா வீசிய 2-வது ஓவரில் இரு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து அசத்தினார் முகமது ஹாரிஸ். இதற்குப் பிறகு மற்றொரு பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து 11 பந்துகளில் 28 ரன்களுடன் நோர்கியா பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு ரபாடா அற்புதமாக கேட்ச் பிடித்து கேப்டன் பாபர் ஆஸமை 6 ரன்களுக்கு வெளியேற்றினார். முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். அடுத்த ஓவரில் ஷான் மசூத் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முகமது நவாஸ் 22 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 13-வது ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து சற்று தடுமாறியது பாகிஸ்தான். 

6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷதாப் கானும் இஃப்திகாரும் நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். சிக்ஸர் மழை பொழிந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தக் கூட்டணி 6 ஓவர்களில் 82 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

22 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஷதாப் கான். 20 பந்துகளில் அரை சதமெடுத்து பெரிய திருப்புமுனையை அவர் ஏற்படுத்தினார். 33 பந்துகளில் அரை சதமெடுத்த இஃப்திகார் கூடுதலாக ஒரு ரன் சேர்த்துக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி 8 பந்துகளில்  4 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். 

20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.

தென்னாப்பிரிக்க அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. ஸ்டப்ஸ், கிளாசென் தலா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இதன்பிறகு ஆட்டம் தொடங்கியபோது புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 14 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 73 ரன்கள் தேவைப்பட்டன. 

கிளாசென் 3 பவுண்டரிகள் அடித்து 15 ரன்களில் ஷாஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஸ்டப்ஸ் மட்டுமே போராடினார். அவரும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி, 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து டி/எல் முறையில் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியினால் பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவு மேலும் தொடர்கிறது. அடுத்த ஆட்டத்திலும் வென்று இதர முடிவுகள் சாதகமாக அமைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →