முகப்பு
செய்திகள்

கார்ல்சன் விலகல்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மோதப்போவது யார்?

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவில்லை என உலக சாம்பியன் கார்ல்சன் அறிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவில்லை என உலக சாம்பியன் கார்ல்சன் அறிவித்துள்ளார். 

கடந்த டிசம்பர் மாதம் நடப்பு உலக செஸ் சாம்பியன் கார்ல்சன் - இயன் நிபோம்நிஷி ஆகியோருக்கிடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபையில் நடைபெற்றது. 2020-ல் நடக்கவேண்டிய இப்போட்டி கரோனா காரணமாகக் கடந்த வருட இறுதியில் தான் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 7.5-3.5 என கார்ல்சன் வெற்றி பெற்று மீண்டும் உலக சாம்பியன் ஆனார். 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 4 சுற்றுகளில் வெற்றி பெற்ற கார்ல்சன், இதர ஆட்டங்களை டிரா செய்து 11-வது சுற்றின் முடிவிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் ஆனார். 2013-ல் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி முதல்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன். 

சமீபத்தில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் போட்டியை வென்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மீண்டும் தகுதி பெற்றார் இயன் நிபோம்நிஷி. இதையடுத்து கார்ல்சன் - நிபோம்நிஷி இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மீண்டும் நடைபெற இருந்தது. 

ஆனால், இப்போட்டியில் பங்குபெற ஆர்வமில்லை என்று கூறி விலகியுள்ளார் கார்ல்சன். மேலும் இதன் காரணமாக செஸ் விளையாட்டிலிருந்து தான் ஓய்வு பெறவில்லை. தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கார்ல்சனின் விலகலால் கேண்டிடேட்ஸ் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற சீனாவின் டிங் லிரெனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மோதவுள்ளார் இயன் நிபோம்நிஷி. இதனால் இம்முறை புதிய உலக சாம்பியன் கிடைக்கவுள்ளார். 

குரோசியாவுக்குச் சென்று கிராண்ட் செஸ் டூர் போட்டியில் விளையாடும் கார்ல்சன், அடுத்ததாக சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நார்வே சார்பாகப் பங்கேற்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.