ரோஹித் சர்மாவுக்கு சதமடிக்க யாரும் கற்றுத்தர தேவையில்லை: ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியே காணாமல் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தியது.
கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தபோதிலும், அவரால் அந்த தொடக்கத்தைப் பயன்படுத்தி பெரிய அளவிலான ஸ்கோர் குவிக்க முடியவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இறுதிப்போட்டிக்குப் பிறகும் இதே விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சதங்கள் அடிப்பது குறித்து ரோஹித் சர்மாவுக்கு கற்றுக்கொடுக்கப்படத் தேவையில்லை என அவருக்கு ஆதரவாக ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அவருக்கு கிடைக்கும் சிறப்பான தொடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டால் அதனை சதமாக மாற்றலாம் எனப் பலரும் கூறுகிறார்கள். ரோஹித் சர்மாவுக்கு சதம் அடிப்பது குறித்து கற்றுக்கொடுக்கப்படத் தேவையில்லை. அவர் ஏற்கனவே அதிக சதங்கள் அடித்துள்ளார். அவர் அணியின் நலனுக்காக விளையாடுகிறார் என்றார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 597 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.