14 பந்துகளில் ஒரு ரன் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டி சமனில் முடிந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 58 ரன்கள் எடுத்தார். இந்திய வீரர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். கே.எல்.ராகுல் மற்றும் அக்ஷர் இடையேயான பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்களை குறைத்தது.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு வெற்றி என்ற சூழலே நிலவியது. 14 பந்துகளில் இந்திய அணி ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா இந்தியாவின் வெற்றியைத் தடுத்தார். இதன்மூலம் ஆட்டம் சமனில் முடிந்தது.
இந்த நிலையில், 14 பந்துகளில் ஒரு ரன் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: 231 ரன்கள் என்ற இலக்கு எட்டக் கூடியதே. ஆனால், அதற்கு வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். இருப்பினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக இருந்தது. சுழற்பந்துவீச்சு தொடங்கியதும் ஆட்டம் மாறியது. கே.எல்.ராகுல் மற்றும் அக்ஷர் இடையேயான பார்னர்ஷிப் எங்களை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தது. இறுதியில் 14 பந்துகளில் ஒரு ரன் எடுக்க முடியாமல் ஆட்டம் சமனில் முடிந்தது ஏமாற்றமளிக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.