2-வது ஒருநாள்: இந்தியாவுக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ களமிறங்கினர். பதும் நிசங்கா முதல் பந்திலேயே சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது.
இருப்பினும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 40 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சதீரா சமரவிக்கிரம (14 ரன்கள்), சரித் அசலங்கா (25 ரன்கள்), ஜனித் லியாநாகே (12 ரன்கள்) எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனையடுத்து, முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே மற்றும் கமிந்து மெண்டிஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை இலங்கையின் ஸ்கோரை உயர்த்தியது. துனித் வெல்லாலகே 35 பந்துகளில் 39 ரன்கள் (ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்தும், கமிந்து மெண்டிஸ் 44 பந்துகளில் 40 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.