ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் வென்றுள்ளார்.
ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன், இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் இடம்பெற்றனர். இவர்கள் மூவரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை வென்றுள்ளார்.
சிறந்த வீரருக்கான விருதினை வென்ற கஸ் அட்கின்சன் பேசியதாவது: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வெல்வதை உண்மையில் கௌரவமாக கருதுகிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் நம்பமுடியாத விதமாக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் தொடரிலேயே இந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுவேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
அணியில் உள்ள சக வீரர்கள், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என அனைவருக்கும் நன்றிகூற கடமைப் பட்டிருக்கிறேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை சிறந்த கௌரவமாக கருதுகிறேன். நிறைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய தொடர் வரவிருக்கிறது. இங்கிலாந்து அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.