19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் குவித்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனியில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சாம் கொன்ஸ்டாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் கேப்டன் ஹுக் வெய்ப்ஜென் மற்றும் ஹாரி டிக்ஸான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதமானமாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்கள் சேர்த்தனர். இருப்பினும் ஹாரி டிக்ஸான் 42 ரன்களிலும், கேப்டன் ஹுக் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் விளையாடியவர்களில் ஹர்ஜாஸ் சிங் சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்தார். அவர் 64 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும், சௌமி பாண்டே மற்றும் முஷீர் கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: சர்வதேச டி20 போட்டிகளில் 5-வது முறையாக சதம் விளாசிய மேக்ஸ்வெல்: மே.இ.தீவுகளுக்கு 242 ரன்கள் இலக்கு!
254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.