முகப்பு
செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Updated On : 12 மே, 2024 at 10:17 AM
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே 4 போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்மதுல்லா 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் முஸராபானி மற்றும் பிரியன் பென்னட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மஸகட்ஸா மற்றும் ஜோங்வி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய பிரியன் பென்னட் 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய கேப்டன் சிக்கந்தர் ராஸா 46 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் ஜிம்பாப்வே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

பிரியன் பென்னட் ஆட்டநாயகனாகவும், டஸ்கின் அகமது தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →