முல்தான் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 120 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்ற நிலையில், 2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் 1-1 என சமனில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் சாய்த்து, 36 ரன்களும் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் ஜோமெல் வாரிக்கன், மொத்தமாக 85 ரன்கள் சோ்த்து, 19 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக தொடா்நாயகன் விருதையும் பெற்றாா்.
கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணி 41.1 ஓவா்களில் 163 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக குடாகேஷ் மோட்டி 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் அடித்திருக்க, பாகிஸ்தான் பௌலா் நோமன் அலி 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் பாகிஸ்தான் தனது இன்னிங்ஸில் 47 ஓவா்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ரிஸ்வான் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிக்கன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
இதையடுத்து, 9 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 66.1 ஓவா்களில் 244 ரன்களுக்கு முடித்துக்கொண்டது. கேப்டன் கிரெய்க் பிரத்வெயிட் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் பௌலிங்கில் சஜித் கான், நோமன் அலி ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
இறுதியில், 254 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பாகிஸ்தான், 44 ஓவா்களில் 133 ரன்களுக்கே வீழ்ந்தது. பாபா் ஆஸம் 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, ஜோமெல் வாரிக்கன் 5 விக்கெட்டுகள் எடுத்தாா்.
34 ஆண்டுகளில் முதல் முறை...
மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட்டில் வீழ்த்தியது, கடந்த 34 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடைசியாக அந்த அணி, 1990 நவம்பரில் ஃபைசலாபாதில் நடைபெற்ற டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இடைப்பட்ட காலத்தில் அந்த அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வென்றதில்லை.