இந்தியாவின் ஒற்றுமையை ஹிந்தியால் சீர்குலைக்க வேண்டாம்
இந்தியாவின் ஒற்றுமையை ஹிந்தியால் பாஜக சீர்குலைக்க வேண்டாம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமையை ஹிந்தியால் பாஜக சீர்குலைக்க வேண்டாம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டின் ஒற்றுமையைக் சீர்குலைக்கும் முயற்சிகளை ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே பாஜக தலைமையிலான நரேந்திரமோடி அரசு செய்து வருகிறது.
ஹிந்தி, சம்ஸ்கிருத திணிப்பு முயற்சிகளை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் செய்கிறது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஹிந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால் தங்களது உரையையும் அறிக்கையையும் ஹிந்தியில்தான் கொடுக்க வேண்டும் எனும் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்தின் கிராமப்புற-ஏழை மாணவர்களுக்கு விலக்கு அளிக்கச் செய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முனைப்புக் காட்டாத மத்திய அரசு, இந்தியில் உரையாற்றவும் அறிக்கை வெளியிடவும் இத்தனை வேகம் காட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? விமான நிலைய அறிவிப்புகள்,பத்திரிகை செய்திகள்-விளம்பரங்கள் எனப் பலவற்றிலும் ஹிந்தியை பரவச் செய்யும் அம்சங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிதிருப்பதுடன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். ஆனால், ஹிந்தி மொழிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து, மற்ற மொழிகள் பேசும் இந்திய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
எனவே, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்.