அதிமுகவிலிருந்து நான் நேற்றே ஒதுங்கி விட்டேன்: டி.டி.வி.தினகரன் பேட்டி
அதிமுகவிலிருந்து நான் நேற்றே ஒதுங்கி விட்டேன் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: அதிமுகவிலிருந்து நான் நேற்றே ஒதுங்கி விட்டேன் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் பேட்டி அளித்துள்ளார். அதன் முழுமையான விபரம் வருமாறு:
அதிமுகவில் இருந்து என்னை ஒதுக்கியதால் எந்த வருத்தமும் இல்லை. என்னை விலகியிருக்கும்படி சொன்னதால் அதிமுகவிலிருந்து நான் நேற்றே ஒதுங்கி விட்டேன் என்னை ஒதுக்குவதாள் அவர்களுக்கு நன்மை நடக்கும் என்றால், கண்டிப்பாக நடக்கட்டும்.
இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்துவதாக திட்டமிட்டோம். அதுவும் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதை கூறுவதற்குத்தான். ஆனால் இன்று எனது வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால் மதியம் மூன்று மணிக்கு மேல் கூட எனது இல்லத்தில் அவர்களை சந்தித்துக் கொள்ளலாம். எனவே கூட்டம், போட்டிக் கூட்டம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை.
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதிவரை என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் திடீர் என்று இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர். அவர்களுக்கு என்ன மாதிரியான அழுத்தம், நிர்பந்தம் இருந்தது என்று தெரியவில்லை.
அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து அவசர கதியில் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கட்சியில் என்னுடைய பலத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேச விரும்பவில்லை.
அமைச்சர்கள் சிலருக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாகவோ, நிர்பந்தம் காரணமாகவோ இந்த முடிவை எடுத்துள்ளனர். கட்சிக்கும் , ஆட்சிக்கும் பலவீனம் ஏற்படுத்தும் எந்த ஒரு முடிவையும் நான் எடுக்க மாட்டேன்.
கட்சியினர் அனைவரும் இந்த சமயத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியின் இரு அணிகளும் இணைவதனால் எனக்கு எந்த வருத்தமம் இல்லை. கட்சிக்கு நலன் உண்டாக்க கூடிய, எதிர்காலத்திலும் நன்மை பயக்க கூடிய முடிவினை முதல்வர் எடுக்க வேண்டும். தற்பொழுது கட்சி அலுவலகத்தை ஓ.பி.எஸ் அணியினர் கைப்பற்ற போவதாக தகவல்கள் வந்துள்ளது.
எனக்குக் கட்சி பொறுப்பை வழங்கியது சசிகலா. எனவே அதை ராஜினாமா செய்வது குறித்த முடிவினை அவரை சந்தித்த பின்பு எடுப்பேன்.
கடந்த 16 ஆண்டுகளாக என்னுடைய பாஸ்போர்ட் நீதிமன்றத்தின் பொறுப்பிலிருக்கும் நிலையில் நான் எப்படி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியும்?
இவ்வாறு தினகரன் பேட்டி அளித்துள்ளார்.