முகப்பு
தமிழ்நாடு

அரசியல் நேர்மை பற்றிப் பேசும் தகுதியை பாஜக இழந்துவிட்டது

அரசியல் நேர்மை பற்றி பேசும் தகுதியை பாஜக இழந்துவிட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

Updated On : 10 ஆகஸ்ட், 2017 at 1:25 AM
பகிர்:

அரசியல் நேர்மை பற்றி பேசும் தகுதியை பாஜக இழந்துவிட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
இதுதொடர்பாக அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக முயன்றதன் மூலம், அரசியல் நேர்மை பற்றிப் பேசும் தகுதியை அந்தக் கட்சி இழந்துவிட்டது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு சரியான பாடத்தை தேர்தல் ஆணையம் புகட்டியுள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
திட்டமிட்டப்படி போராட்டம்: நீட் தேர்வு மூலம், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை இருளடையச் செய்யும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. காவல்துறை அனுமதி மறுத்தாலும், நீட் விலக்கு கோரி மதிமுக அறிவித்துள்ள போராட்டம், சென்னையில் வியாழக்கிழமை (ஆக.10) திட்டமிட்டபடி நடைபெறும்.
ஹைட்ரோ கார்பன் திட்டம்: கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதற்காக தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்ட, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இயந்திரங்களை உள்ளே செல்லவிடாமல் தடுப்போம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மிகப் பழமையான சிலைகளை, இந்து சமய அறநிலையத் துறை அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இதற்கு யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. விலை மதிப்புடைய தூண்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.