மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள கடுமையான சட்டத்தைத் திரும்பப் பெற தூதரக ரீதியிலான அழுத்தத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும்
தமிழ்நாடுமீனவர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள கடுமையான சட்டத்தைத் திரும்பப் பெற தூதரக ரீதியிலான அழுத்தத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும்
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள கடுமையான சட்டத்தைத் திரும்பப் பெற தூதரக ரீதியிலான அழுத்தத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தொடர் கைது நடவடிக்கை, படகுகள் பறிமுதல் என ஏற்கெனவே பல இன்னல்களை தமிழக மீனவர்களுக்குக் கொடுத்து வரும் இலங்கை அரசு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் கடுமையான தண்டனைப் பிரிவுகள் கொண்ட ஒரு சட்டத்தை இப்போது நிறைவேற்றியுள்ளது.
இது இந்தியாவின் மீன் ஏற்றுமதிக் கொள்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற தூதரக ரீதியிலான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்கு 2000}க்கும் மேற்பட்ட மீன் பிடிப் படகுகளை மாற்றி, ஆழ் கடல் மீன்பிடிப்புக்கான புதிய படகுகளை வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கான நிதியாதாரம் மீனவர்களிடம் இல்லை. எனவே, இதற்காக ஏற்கெனவே கோரப்பட்ட ரூ. 1,520 கோடியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்.
அதுவரை தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரியமான மீன் பிடிப் பகுதிகளில்தான் மீன் பிடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அவ்வாறு செல்லும் மீனவர்கள் மீது இலங்கை அரசு இப்படியொரு கொடூரமான சட்டத்தைக் கொண்டுவந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்.
எனவே, இந்தச் சட்டத்தை இலங்கை அரசு உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்துவதோடு, கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.