முகப்பு
தமிழ்நாடு

மின்கட்டணம் செலுத்துவதற்கு புதிய செயலி அறிமுகம்

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான புதிய செயலியை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி புதன்கிழமை அறிமுகம் செய்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:25 PM
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்கட்டணம் செலுத்துவதற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி.
பகிர்:

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான புதிய செயலியை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி புதன்கிழமை அறிமுகம் செய்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
செயலியை அறிமுகப்படுத்தி அமைச்சர் பேசியது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2.7 கோடி தாழ்வழுத்த மின்நுகர்வோர் உள்ளனர். இவர்கள், மின்சாரக் கட்டணம் செலுத்துவதை எளிமையாக்கும் வகையில், வங்கிகள், தபால் நிலையங்கள், இணையதள வங்கி சேவை, பண அட்டை, கடன் அட்டை, இ- சேவை மையங்கள் என பல்வேறு முறைகளில் மின் கட்டணம் செலுத்தும் வசதிகள் நடைமுறையில் உள்ளன. கூடுதல் நடைமுறையாக இந்தச் செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
எப்படி செயல்படும்?: ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் கூகுள் பிளேஸ்டோரில் சென்று பஅசஎஉஈஇஞ அடட என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
ஏற்கெனவே இணையதளத்தில் மின்கட்டணத்தைச் செலுத்தும் நுகர்வோர் அதற்கான பயனீட்டாளர் பெயர், கடவுச்சொல்லை(Login, Password) பயன்படுத்தி, மின்கட்டணத்தைச் செலுத்தலாம்.
புதிதாக உபயோகிப்போர் தங்களுடைய மின்நுகர்வோர் எண், புதிய கடவுச்சொல், மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பு செல்லிடப்பேசிக்கு செயற்பாட்டு எண் (Activation code) அனுப்பப்படும். அதனை உபயோகித்து மின்கட்டணத்தைச் செலுத்திக் கொள்ளலாம்.
இந்தச் செயலியின் மூலம் நுகர்வோரின் கட்டண விவரங்கள், மின் கணக்கீடு செய்யப்பட்ட விவரங்கள், மின்கட்டணம் செலுத்திய விவரங்கள் உள்ளிட்டவற்றையும் பெறலாம். மேலும் பதிவு செய்யாத நுகர்வோரும் இந்த செயலியின் மூலம் கட்டணங்களைச் செலுத்த முடியும்.
இணையதள வங்கி சேவை, பண அட்டை, கடன் அட்டை உள்ளிட்டவற்றின் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். செயலியைப் பயன்படுத்தி மின்கட்டணப் பரிவர்த்தனை முடிந்தவுடன், அதற்கான மின் ரசீதும் அனுப்பப்படும்.
துறை செயலர் விக்ரம் கபூர், மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
1912 எண்ணுக்கு இனி கட்டணமில்லை!
மின்தடை புகாருக்கான 1912 என்ற எண் கட்டணமில்லா தொலைபேசியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டி: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்தடை உள்ளிட்ட புகார்களுக்காக 1912 என்ற புகார் எண் செயல்பட்டு வந்தது. இந்த எண் வியாழக்கிழமை (ஜூலை 13) முதல் கட்டணமில்லா தொலைபேசி எண்ணாக செயல்படும்.
மேலும் பராமரிப்புப் பணிகளின் காரணமாக நடைபெறும் திட்டமிட்ட மின்தடை குறித்து ஜூலை 1- ஆம் தேதி முதல் 47 லட்சம் குறுஞ்செய்திகள் நுகர்வோருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments