முகப்பு
தமிழ்நாடு

ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டிடிவி தரப்பு நீதிமன்றத்தில் மனு!

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டிடிவி தரப்பு... 

Updated On : 3 அக்டோபர், 2017 at 3:30 PM
பகிர்:

மதுரை: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டிடிவி தரப்பு மதுரை  உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதிமுகவில் நிகழ்ந்துள்ள இபிஎஸ் - ஒபிஎஸ் அணிகள் சேர்க்கைக்குப் பிறகு அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் நியமனங்கள் செல்லாது என்றும்,அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி தில்லி சென்றனர். அங்கு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

Advertisement

அத்துடன் முடக்கப்பட்ட கட்சியின் பெயர் மற்றும் சின்னம் இரண்டும் ஒருங்கிணைந்த அணியான தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதே நேரம் டிடிவி தினகரன் தரப்பும் இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு  செய்திருந்தது 

அன்றே அமைச்சர்கள் தலைமையிலான அணி சென்னை திரும்பிய பின்னர் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவின் இரட்டைஇலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

முன்னதாக இந்த விசாரணை அக்டோபர் 6-ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதின்ற கிளையானது, அதிமுகவின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையமானது வரும் அக்டோபர் மாதம் 30 -ஆம் தேதி இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.  

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க முடியாது என்று டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 28-ஆம் தேதி அன்று அனுமதி மறுத்துள்ளது. 

இதன் காரணமாக அக்டோபர் 6-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிய வருகிறது. இந்நிலையில் தற்பொழுது அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தரப்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது

அம்மனுவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.