முகப்பு
தமிழ்நாடு

முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவர் சங்கரய்யா பிறந்தநாள்: ஸ்டாலின் நேரில் வாழ்த்து    

திங்களன்று தனது 98-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவர் சங்கரய்யாவை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

Updated On : 15 ஜூலை 2019, 4:08 pm IST
பகிர்:

சென்னை: திங்களன்று தனது 98-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவர் சங்கரய்யாவை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. என்.சங்கரய்யா அவர்களின் 98வது பிறந்தநாளினையொட்டி, இன்று (15-7-2019), காலை, சென்னை, குரோம்பேட்டையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவரது பிறந்தநாளினையொட்டி, ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:-

Advertisement

Advertisement

பழுத்த அனுபவமுள்ள மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பெரியவர் திரு என். சங்கரய்யா அவர்களுக்கு 98 ஆவது இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கடலாகக்  காட்சியளிப்பவர். ஏழை-எளிய அடித்தட்டு மக்களின்- உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைக்குரலாக ஒலிப்பவர். நேர்மையான அரசியலின் நிலைக்கண்ணாடியாகப்  பொதுவாழ்வில் திகழ்பவர்.

பொதுவாழ்விற்குத் தேவையான அருங்குணங்களைப் பெற்றவருக்கு 98 ஆவது பிறந்த நாள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களுடனும், திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் மிகுந்த நட்பு பாராட்டி - இன்றைக்கும் தோழமையின் சிகரமாக விளங்குபவர். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தி.மு.க. உறவு, அரசியல் ரீதியான உறவு ஆகியவற்றையெல்லாம் தாண்டியது எங்கள் இருவரது நட்பு” என்று தலைவர் கலைஞர் அவர்களுடனான தனது நட்பு பற்றி திரு சங்கரய்யா அவர்கள், “இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் நிலைத்து நிற்கிறது.

திரு.சங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே ஒரு தனிச்சிறப்பு என்பது மட்டுமின்றி - நமக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பு  என்றே கருதுகிறேன். அய்யா அவர்கள் நூற்றாண்டையும் கடந்து  நீடூழி வாழ வேண்டும்; வழிகாட்ட வேண்டும் என்று வணங்கி, வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., பல்லாவரம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments