முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மழை நீடிக்கும்; தஞ்சை, திருவாரூரில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 5 டிசம்பர், 2020 at 1:16 PM
தமிழகத்தில் மழை நீடிக்கும்; தஞ்சை, திருவாரூரில் கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, மன்னார்வளைகுடாவுக்கு அருகே கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கும்.

இதன் காரணமாக, தமிழகத்தின் கடலூர், வேலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளிலும் கன மழை பெய்யும்.

நாளை டிசம்பர் 6-ம் தேதி ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கன மழை முதல் மிகக் கனமழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக் கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி பகுதியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது.

நாகை மற்றும் காரைக்காலில் தலா 16 செ.மீ. மழையும் குடவாசல் (திருவாரூர்), புவனகிரி (கடலூர்) தலா 15 செ.மீ. மழையும் சேத்தியாத் தோப்பு பகுதியில் 14 செ.மீ. மழையும்  தரங்கம்பாடியில் 13 செ.மீ. மழையும், சீர்காழி (நாகை), டிஜிபி அலுவலகம் (சென்னை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) 12 செ.மீ. மழையும் ராமேஸ்வரம் பகுதியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு.. 

சூறாவளி காற்றானது மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்திலும்,  இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும். எனவே மீனவர்கள் குமரி, மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு இன்றும், நாளை கேரள கடலோரப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.