ஆவின் நிறுவனத்தைக் கண்டித்து பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
ஆண்டிபட்டி அருகே ஆவின் நிறுவனத்தைக் கண்டித்து பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே ஆவின் நிறுவனத்தைக் கண்டித்து பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், பிள்ளைமுகன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக பால் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இங்குக் கறக்கப்படும் பால் கிராமங்களில் செயல்படும் பால் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தேனி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதமாக கரோனா ஊரடங்கு காலத்தில் தேனி ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 31 ரூபாயிலிருந்து 27 ரூபாயாக குறைத்து வழங்கி வருவதாகவும், மேலும் தனியார் நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலைக்குப் பாலை வாங்கிக்கொண்டு தங்களது பாலை எடுக்காமல் திருப்பி அனுப்புவதாகவும் கால்நடை வளர்ப்பவர்கள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில் பால் கொள்முதல் செய்யாத ஆவின் நிறுவனத்தைக் கண்டித்து ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் கலந்துகொண்டனர். பாலை கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.