முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பொது முடக்கத்தைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் பொது முடக்கத்தைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் பொது முடக்கத்தைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். 

இதன்பின்னர் தமிழக அரசு தரப்பில் ஆஜராகியிருந்த அரசு வழக்குரைஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், சென்னையில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், பொது முடக்கத்தைத் தீவிரப்படுத்த   அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளில்  மாற்றம் ஏதாவது கொண்டு வரும் திட்டம்  உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதுதொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு எதையும் விசாரணைக்கு எடுக்கவில்லை, பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கேள்வியை எழுப்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிப்பதாக அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் இதுதொடர்பாக  வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்க அரசுத்தரப்பு வழக்குரைஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையில் பொது முடக்க உத்தரவைக் கட்டாயமாக அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →