வேதாரண்யத்துக்கு அருகே படகு பழுதானதால் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் தகவல் அறிந்து சென்ற கிராம மீனவர்கள் பத்திரமாக மீட்டு வெள்ளிக்கிழமை கரை சேர்த்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திலிருந்து தமிழ்ச்செல்வம் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடி இழைப்படகில் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்டவர், செந்தில், குமார், பழனி ஆகிய 4 மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குள் சென்றனர்.
வேதாரண்யத்துக்கு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்களின் படகு இஞ்சின் வியாழக்கிழமை பழுதானது. இது குறித்து அந்த மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்களுக்குச் செல்லிட பேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆறுகாட்டுத்துறையிலிருந்து ஒரு படகில் சென்ற சில மீனவர்கள், நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும், படகுடன் இழுத்து வந்து வெள்ளிக்கிழமை கடற்கரை சேர்த்தனர்.