மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டை புதுப்பிக்கப்படுமா?
மார்ச் மாத இறுதியுடன் முடிவுற்ற பேருந்து பயண அட்டையை புதுப்பித்து தருமாறு நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நாமக்கல்: மார்ச் மாத இறுதியுடன் முடிவுற்ற பேருந்து பயண அட்டையை புதுப்பித்து தருமாறு நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் 41,000 பேர் உள்ளனர். இவர்களில் பார்வையற்றவர்கள் 250 பேரும், கை, கால்கள் பாதிப்படைந்தவர்கள் 450 பேரும், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி வருகின்றனர். ஓராண்டு செல்லத்தக்க வகையிலான இந்த பயண அட்டை கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவுற்றது.
தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் பயண அட்டையை புதுப்பித்துக் தருமாறு மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து அத்துறையின் மாவட்ட அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டு வருகின்றனர். பழைய பேருந்து அட்டையை தொடர்ந்து ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுமா அல்லது மாற்று அட்டை வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது மாற்றுத்திறனாளிகளில் பலர் பேருந்து பயண அட்டை கிடைக்காமல் போய்விடுமோ, பேருந்துகளில் ஏற்ற மாட்டார்களோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி கூறியது; மார்ச் 31ஆம் தேதியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவில் செல்லக்கூடிய பேருந்து பயண அட்டை காலாவதியாகிவிட்டது. அது தொடர்பாக அட்டை வைத்துள்ள 750 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பயண அட்டை வழங்குவது தொடர்பாக வலியுறுத்தப்படும். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள, தற்போது பயண அட்டை பயன்படுத்தி வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் புதிய அட்டை கண்டிப்பாக வழங்கப்படும் என்றார்.