சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர நிவர் புயல், கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 250 கி.மீ. வேகத்திலும் சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தீவிர நிவர் புயலானது, அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும். இது வடமேற்காக நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி இடையே காரைக்கால் - மகாபலிபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை: முதல்வர் பழனிசாமி
இதன் காரணமாக, தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழையும், ஓரிரு பகுதிகளில் அதிதீவிர கனமழையும் பெய்யக் கூடும். இந்த மாவட்டங்களில் பெரும்பாலானவற்றுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிவர் அதி தீவிரப் புயலானது கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 - 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சிலவேளைகளில் மணிக்கு 145 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.