ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2.63 லட்சம் கடன்: பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, முந்தைய திமுக ஆட்சியில் உபரி வருவாய் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை கடந்த 10 ஆண்டுகளில் மாறி, மிப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் நிதிநிலை சரியத் தொடங்கிவிட்டது.
கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டதால், வட்டி அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் ரூ.2,63, 976 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே..'தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது'
ஜீரோ வரியால் ஏழைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது.
தமிழகத்தில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. சொத்து வரி உயர்த்தப்படாததால் பணக்காரர்களுக்கு பலன் கிடைக்கிறது.
தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு ரூ.20,033 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு மானியங்களுக்கு அதிகம் செலவிடும் நிலையில் சரியான பயனாளிகள் யார் யார் என்பது பற்றிய விவரம் இல்லை. எனவே, மானியம் பெறுவோரின் விவரங்கள் திரட்டப்பட்டு, சரியான நடைமுறை உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடியை வட்டியாக செலுத்துகிறது. வட்டி செலுத்தும் திறன் குறைந்துவிட்டதால், தமிழக அரசின் கடன் தொகை அதிகரித்து வருவதாகவும் நிதியமைச்சர் கூறினார்.