இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை (ஓபிசி) முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே திருப்பி அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை (ஓபிசி) முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே திருப்பி அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்புக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதை அடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் பலரும் இந்த மசோதாவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது சுட்டுரைப் பதிவில், ஓபிசி பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேறி இருக்கிறது. சமூகநீதிப் பயணத்தில் இது ஒரு மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு எனும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும் எனவும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.