காஞ்சிபுரம், செங்கல்பட்டில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல்
சுதாகரன் மற்றும் இளவரசிக்குச் சொந்தமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுதாகரன் மற்றும் இளவரசிக்குச் சொந்தமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் சொந்தமாக சென்னையிலிருந்த 6 சொத்துகள் நேற்று முடக்கப்பட்ட நிலையில், இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்த 17 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. பச்சைப் புடவையில் சசிகலா; ஒசூரில் வரவேற்பு வளையங்கள்
உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், சுதாகரன் மற்றும் இளவரசிக்குச் சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியில் உள்ள 6 சொத்துகள் முடக்கப்பட்டதாகவும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்துக்கு உள்பட்ட 17 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசி, சுதாகரன் ஆகியோரின் 6 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி நேற்று தெரிவித்திருந்தார்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில், கடந்த 2017 பிப்.14-இல் வழங்கப்பட்டஇறுதித் தீா்ப்பின்படி, வழக்கில் தொடா்புடைய சென்னை வருவாய் மாவட்டத்துக்குள்பட்ட வி.கே. சசிகலாவின் உறவினா்களான வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோா் பங்குதாரா்களாக உள்ள தனியாா் நிறுவனத்தின் சொத்துகள் அரசுக்கு உரிமை மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வந்த கார்களில் தீ விபத்து
அதன்படி, சென்னை வாலஸ் தோட்டம் 1-ஆவது தெரு, சென்னை ஸ்ரீ ராம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் லெக்ஸ் பிராப்பா்ட்டி டெவலப்மெண்ட் லிமிடெட் என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமான இடம், கட்டடங்கள், வீடு உள்ளிட்ட 6 சொத்துகள், தமிழக அரசின் சொத்து என உரிய பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சொத்துகள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துகள். எனவே, இந்த சொத்துகளிலிருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்குப் பாத்தியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.