சுகாதாரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துக: ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சுகாதாரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துக என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் சுகாதாரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துக என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
உலகத் தரத்தை இலக்காக கொண்டு மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்களை உருவாக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
பொதுமக்களின் நலனுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத் திட்டங்கள், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், புதிய மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய நிலை, பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆற்றிவரும் பணிகள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும், ஜேஐசிஏ, உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும் நிதி உதவியில் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும், இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (2.7.2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்: ஐவர்மேக்டின் என்றோர் அருமருந்து: மறைக்கிறதா மருத்துவத் துறை?
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்திடவும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனை செயல்பாடுகள், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்துவது, அரசு மருத்துவ நிலையங்களில் உள்ள பணியாளர் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல், உணவுப் பாதுகாப்பு, மருத்துவமனை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு இணைய வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும், தமிழ்நாட்டில் சுகாதார தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆலோசனை வழங்கினார்.
தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த மாணாக்கர்களை உருவாக்குவதில் சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தினார்.