தொடர் கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-ஆவது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்று சென்னை தியாகராய நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்,
தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக பணிகளைச் செய்திருக்கிறார்கள். அதனால்தான் தி.நகரில் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது.
விஜயராகவா சாலையில் மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் இரண்டு நாட்கள் மழை இருக்கிறது என்கிறார்கள். அதையும் பார்த்துவிட்டுத்தான் மத்திய அரசிடம் நிவாரணம் கோர முடியும்.
எந்த நோக்கத்தோடு, எந்தக் கொள்கையோடு, எந்த இலட்சியத்தோடு, ஆட்சிக்கு வந்தோமோ அதை நிச்சயமாக, அதே அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பகுதிகளில் முதலில் முக்கியத்துவம் கொடுத்து, நாங்கள் நிவாரண நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.
கொட்டும் மழையில் ஆய்வு செய்வது எனக்கு புதிதல்ல. நான் மேயராக இருந்தபோது செய்திருக்கிறேன், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதும் துணை முதலமைச்சராக இருந்தபோதும் செய்துள்ளேன்.
இந்த 10 வருடத்தில் கடந்த ஆட்சியில் எதுவுமே செய்யாத காரணத்தால்தான், மழை பெய்து எங்கெங்கெல்லாம் அடைப்பு வரும் என்று முன்னதாகவே தெரிந்து வைத்து அதையெல்லாம் சரிசெய்து கொண்டிருக்கிறோம். இந்த மழைக்காலம் முடிந்தவுடன் நிரந்தரமாக, சேதாரம் இல்லாத சென்னையாக மாற்றுவோம்.
மழைக்காலங்களில் நோய் பரவாமல் இருக்க, முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்குக் கூட மருத்துவ முகாம்கள் அமைத்து, மருத்துவர்களை நியமித்து அந்தப் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.