மேட்டூர் அணை: நீர்வரத்து 1.2 லட்சம் கன அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,20,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,20,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக நிரம்பிய நிலையில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1,20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காலையில் 51 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது 1.2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் வெள்ள நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 97,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.