நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர்க் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இவற்றை சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ கே.பொன்னுசாமி தொடக்கி வைத்தார்.
மலர் கண்காட்சியில் 75 ஆயிரம் மலர்களைக் கொண்டு மாட்டு வண்டி, வண்ணத்துப்பூச்சி, தேனீ, வில் அம்பு போன்றவை வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், படகு குழாமில் மூன்று புதிய படகுப் போக்குவரத்தும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பல்வேறு பணிகளின் காரணமாக பங்கேற்கவில்லை.
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறும் இரண்டு நாள்களிலும் சுற்றுலாத் துறை, கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கொல்லிமலை பகுதி அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளன. மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
விழாவின் இரண்டாம் நாளான புதன்கிழமை மாலை 3 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விழாவில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்தியவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குதல், விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.