மன்னிப்புக் கடிதம் கொடுத்த பாஜக தலைவர்கள்?
தமிழக பாஜக தலைவர்கள் இருவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை: விமானத்தில் அவசரகாலத்தில் பயன்படுத்தும் கதவை திறந்து விளையாடியக் குற்றத்துக்காக தமிழக பாஜக தலைவர்கள் இருவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளை செய்திருக்கிறார்.
இதையும் படிக்க.. நயாகரா நீர்வீழ்ச்சிக்கே இந்த நிலையா?
அதாவது, கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.
விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது.
மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. நேரடியாக யாருடைய பெயரையும் அமைச்சர் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட காதுகேட்கும் கருவிகளின் விலையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உயர்த்திக் கூறியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சுட்டுரையில் சூறாவளியைக் கிளப்பியிருந்தார்.
பிறகு, ரஃபேல் வாட்ச் விவகாரம் இரு தரப்புக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் போரையே ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை தனது டிவிட்டர் பதிவு மூலம் துவக்கிவைத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இது தொடர்பான விளக்கங்கள் அல்லது மறுமொழிகள் அல்லது பதில்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.