முகப்பு
தமிழ்நாடு

திமுகவுக்கு பாடம் கற்பிக்கும் தேர்தல்: எடப்பாடி கே பழனிசாமி

பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்கும் தேர்தலாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமையும் என்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி கூறினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
எடப்பாடி கே பழனிசாமி
பகிர்:

மதுரை: பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்கும் தேர்தலாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமையும் என்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி கூறினார்.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து கோ புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அவர் பேசியது:

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை எல்லாம் அக்கட்சி மறந்துவிட்டது. தற்போது முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார். 

ஆனால் முந்தைய அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை தான் ஒவ்வொன்றாக திமுக அரசு திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவதாக கூறினார்கள். இதுவரை அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி  செய்யப்படும் என்றனர். 

திமுகவினரின் வாக்குறுதியை நம்பி நகைகளை அடமானம் வைத்தவர்கள் தற்போது நகைகளை திருப்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தற்காக அபராதம் செலுத்துவதைப் போல நகைக் கடனுக்கான வட்டியை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். பொய்களை மட்டும் நம்பி திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசுதான் நீட் தேர்வு எனும் நச்சு விதையை விதைத்தது என்பதை யாராலும் மறைக்க முடியாது. கடந்த 2010 காங்கிரஸ் ஆட்சியின்போது நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தினார். 
உச்சநீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 2011-இல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் இரு நீதிபதிகள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசு மீண்டும் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது மத்திய சுகாதாரத் துறையின் இணை அமைச்சராக திமுகவைச் சேர்ந்தவர் தான்  பொறுப்பில் இருந்தார். அந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது. ஆனால் இப்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது போல திமுக நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மறைக்க முடியாது. இது குறித்து எப்போது வேண்டுமானாலும் விவாதத்துக்கு தயாராக இருக்கிறோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக எந்த சாதனையையும் சொல்லி ஓட்டு கேட்க முடியாது. கடந்த 9 மாதங்களில் மக்களை ஏமாற்றியது தான் அவர்களது சாதனையாக இருக்கிறது. ஆகவே இந்த தேர்தல் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்கும் தேர்தலாக இருக்கும் என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே ராஜூ,  ஆர்.பி. உதயகுமார்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி. ராஜன் செல்லப்பா பெரிய புள்ளான், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →