முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைது

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை மேலும் ஒரு வழக்கில் சென்னை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
ஜெயக்குமார்(கோப்புப்படம்)
பகிர்:


முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை மேலும் ஒரு வழக்கில் சென்னை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள ஜெயக்குமாரின் ஜாமின் மனு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்த நாளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 4 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றபோது, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-ஆவது வார்டில் உள்ள சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்குள் திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் அத்து மீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் நரேஷைப் பிடித்து, அரை நிர்வாணமாக்கி தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இது தொடர்பாக நரேஷ் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீஸார் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.