கூத்தாநல்லூர்: காப்பீட்டில் விடுபட்ட கிராமங்களுக்கும் இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல்
கூத்தாநல்லூரில், காப்பீடு திட்டத்தில் விடுபட்டுப்போன கிராமங்களுக்கும் இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், காப்பீடு திட்டத்தில் விடுபட்டுப்போன கிராமங்களுக்கும் இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி பாலத்தருகே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற சாலை மறியலுக்கு, மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்தார். மறியலில், நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு கேட்கும் நிதியை குறைக்காமல் மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். அறுவடையாகும் நிலையில் மூழ்கி அழிந்து போன குறுவை நெல் பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.
மழையில் மூழ்கி இழந்த தாளடி மற்றும் நீர் சூழ்ந்த சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். உயிரிழப்பிற்கு ரூ.10 லட்சமும், ஆடு, மாடுகள் உயிரிழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொடர் மழையால் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு பொருள்களுடன் தேங்காய் மற்றும் பொங்கல் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும்.
2020-2021 காப்பீடு திட்டத்தில், விடுபட்டுப்போன கிராமங்களின் விவசாயிகளுக்கும் உடனே உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியலில், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே.தவபாண்டியன், நகரச் செயலாளர் எம்.சுதர்சன், விவசாய சங்க நகர செயற்குழு உறுப்பினர் கே.நாகராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ், கே.ராமதாஸ், நகர மன்ற முன்னாள் உறுப்பினர் கே.பேபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
லெட்சுமாங்குடி பாலத்தில் நடைபெற்ற சாலை மறியலால், திருவாரூர் - மன்னார்குடி மற்றும் கொரடாச்சேரி - வடபாதிமங்கலம் பிரதான சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.