ராமேஸ்வரம் கடலில் நாளை (ஜன.31) தர்ப்பணம் செய்ய அனுமதி
தை அமாவாசையையொட்டி நாளை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தை அமாவாசையையொட்டி நாளை (ஜனவரி 31) ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயில் புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர் ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Advertisement
ஆனால், கரோனா 3வது அலை பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.